Friday, May 3, 2024

பணம் சேர பானை பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்க    வேண்டிய  அனைத்து நன்மைகளுக்கும்     நம்முடைய   குலதெய்வத்தின்  அருள் பரிபூரணமாக  வேண்டும்.  அப்படியே குலதெய்வத்தின் அருள் கிடைக்காத பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். சாதாரணமாக திருமணம், குழந்தை பாக்கியம், வீடு கட்டுதல், கடன் இல்லாத வாழ்க்கை, பிரச்சனை இல்லாத வாழ்க்கை, பணம் சேர என்று அனைத்து விதமான நல்ல காரியங்களுக்கும் குலதெய்வத்தின் அருளை நாம் பரிபூரணமாக பெறவேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பணம் சேர குலதெய்வத்தை நினைத்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம். 
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள் கூட தங்களுடைய இல்லத்தில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் அன்றைய காலத்தில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடைபெற வேண்டும் என்றால் உடனே ஒரு மஞ்சள் துணியில் ஒண்ணே கால் ரூபாய் எடுத்து குலதெய்வத்தை நினைத்து முடிந்து வைத்து விடுவார்கள். அந்த காரியம் நல்ல விதமாக நடைபெற்ற பிறகு குலதெய்வ ஆலயத்திற்கு சென்று அந்த நாணயத்தை உண்டியலில் சேர்த்து விடுவார்கள். இது இன்றளவும் பலரும் பின்பற்றக்கூடிய ஒரு வழக்கமாகவே இருக்கிறது.
அது  மட்டுமல்லாமல்  அன்றைய காலத்தில்   வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தக்கூடிய    அரிசியை  மண் பானையில் தான் போட்டு வைப்பார்கள். அப்படி போட்டு வைப்பதன் மூலம் தங்களுடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான தானிய வகைகளும் எந்தவித தட்டுப்பாடும் இன்றி கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் மண் பானை என்பதே மிகவும் அரிதாகிவிட்டது. அதற்கு மீறி வாங்கினாலும் அதை ஒரு அழகுப் பொருளாக தான் பயன்படுத்துகிறார்களே தவிர்த்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக அதை கருதுவதில்லை. 
குலதெய்வத்தை நாம் முழுமையாக நம் வீட்டில் நிலைநிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் மண்பானையை தங்களுடைய தெய்வீக வழிபாட்டிலோ அல்லது சமையல் அறையிலோ உபயோகப்படுத்த வேண்டும். ஓரு வளர்பிறை வெள்ளிக்கிழமையாக பார்த்து அன்றைய தினம் மண் பானையை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் தான் வாங்க வேண்டும்.
வாங்கி வந்த மண் பானையை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த பானை சிறிய அளவில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் கண்டிப்பாக முறையில் மண்பானையாக தான் இருக்க வேண்டும். இந்த மண்பானையை மஞ்சள் நீரினால் சுத்தம் செய்த பிறகு அதை நன்றாக உலர விட்டு, மாலை 6 மணிக்கு அந்த மண்பானை நிறைய நம் வீட்டில் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் அரிசியை போட வேண்டும். முடிந்த அளவிற்கு பச்சரிசியை உபயோகப்படுத்துவது நல்லது.
இப்படி அரிசியை நிரம்ப போட்டுவிட்டு அதற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும். இப்படி தொடர்ந்து 27 நாட்கள் ஒரு ரூபாய் நாணயங்களை அதில் போட்டுக் கொண்டே வரவேண்டும். 
27 நாட்கள் முடிந்த பிறகு 28 வது நாள் இந்த பானையில் இருக்கும் அரிசியை பச்சரிசியாக இருக்கும் பட்சத்தில் அதையும் அந்த 27 ஒரு ரூபாய் நாணயத்தையும் எடுத்துக்கொண்டு குலதெய்வ ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு அந்த பச்சரிசியை வைத்து பொங்கல் செய்து குலதெய்வத்திற்கு நெய்வேத்தியமாக படிக்க வேண்டும்.
அந்த 27 ஒரு ரூபாய் நாணயங்களையும் குலதெய்வ அபிஷேகம் நடக்கும் பொழுது அபிஷேகத்திற்காக நாணயங்களை நகைகளை கேட்பார்கள் அல்லவா? அந்த மாதிரி கேட்கும் பொழுது இந்த 27 நாணயங்களையும் குலதெய்வத்தின் அபிஷேகத்திற்காக கொடுத்து விட வேண்டும். இப்படி நாம் வருடத்திற்கு ஒருமுறை செய்தால் கூட நம் வீட்டில் குலதெய்வத்தின் அருளால் பணவரவு என்பது தாராளமாக இருக்கும்.
பணவரவு ஏற்பட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பதால் நம்முடைய குலதெய்வத்தை முழு மனதுடன் நம்பி இந்த பரிகாரத்தை செய்து பணவரவை அதிகப்படுத்தி கொள்ளலாம்.

Latest article