Friday, May 3, 2024

தை வெள்ளிக்கிழமை வழிபாட்டு முறைகள்

சுமங்கலிப் பெண்கள் தை வெள்ளிக்கிழமைகளில், மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் தீராத வினையெல்லாம் தீரும். வேண்டிய வரும் கிடைக்கும். பிற நாட்களை காட்டிலும் தை வெள்ளிக்கிழமைகள், புனிதம் நிறைந்த நாளாகும். எனவே, இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும். தை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். மேலும், தை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருவார்கள் பக்தர்கள். அதிலும் தை மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் காளிகாம்பாளைத் தரிசனம் செய்ய வந்துவிடுவார்கள்.

தை மாத வெள்ளிக்கிழமையில், காளிகாம்பாளை தரிசிப்போம். நமக்கு என்ன தேவை என்பதை நாம் கேட்காமலே உணர்ந்து நமக்கு வழங்குபவர் காளிகாம்பாள். உலகத்துக்கே அன்னையாகத் திகழ்பவள்தானே பராசக்தி. காளிகாம்பாளிடம் நாம் ஒருமுறையேனும் நின்று அவளை தரிசித்தாலே போதும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் போக்கி, நம்மை அருளிக் காப்பாள் காளிகாம்பாள். தை வெள்ளியில், விரதம் இருந்து அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசிப்போம். நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை. தொடர்ந்து தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள்.

நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி. தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், விரதம் இருந்து குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து, அதில் அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு க்ஷலலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். மேலும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும். கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். தம்பதியர்கள் மனம் ஒருமித்து வாழ இந்த விரதத்தை, கடைபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோன்று, தை வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும். நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். மேலும், தை வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர் சக்திகள் இருந்தால் விலகி விடும்.

அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்வு கிடைக்கும். அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். இதேபோல் அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் மிகச் சிறந்த நற்பலன்களை தரும். தை வெள்ளிக்கிழமைதோறும், குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.

Latest article